மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ளதால், 11 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து , கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் கே.எஸ்.ஆர் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணை இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆகையால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் 1,65,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,53,091கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 116.36 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் டெல்டா பாசனத்திற்காக மற்றும் ஆடிப்பெருக்கு விழா விற்காகவும் வினாடிக்கு 12000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர் திறப்பு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 87.784 டிஎம்சியாக உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கு, இன்னும் 3.50 அடியே எஞ்சியுள்ளது. இன்னும் 5 டிஎம்சி தண்ணீரை அணைக்குள் தேக்கினாலே முழு கொள்ளளவை எட்டிவிடும் நிலை உள்ளது.
அணை நிரம்பும்பட்சத்தில் உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில், அணை வளாகத்தில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.36 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை இருவரும் நிலையில் மேட்டூர் அணை ஓரிரு நாட்களுக்குள் 120 அடியை எட்டிவிடும்.
எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். உடைமைகள் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.