டெல்டா மாவட்டங்களில் கரைபுரளும் காவிரியில் ஏராளமானோர் நீராடி, தேங்காய், பழங்கள், காதோலை கருகமணி மற்றும் வெல்லம் – பொட்டுக்கடலையுடன் கலந்த பச்சரிசியையும் காவிரி கரையில் வைத்து படையலிட்டு காவிரி தாயையும், சூரியனையும் வணங்கி ஆடிப்பெருக்கை ஏராளமானோர் கொண்டாடினர்.
காவிரி நதியை அன்னையாக பாவித்து வழிபடும் வழக்கம் காவிரி டெல்டா பாசன பகுதி மக்களிடையே உள்ளது. ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழாவின்போது காவிரி தாயை வணங்கி , அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடிப்பெருக்கு விழா இந்த பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டப படித்துரையில் 18 படிகளும் நிரம்பி வழியும் காவிரி படித்துறையில் ஏராளமானோர் காவிரி அன்னைக்கு படித்துறைகளில் படையல் இட்டு வழிபாடு செய்தனர்.
திருவையாறு காவிரி கரையில் குவிந்த ஏராளமானோர் பச்சரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை படித்துறைகளில் வைத்து விவசாயம் செழித்து, உணவு உற்பத்தி பெருக காவிரி தாயை வழிபட்டு வருகின்றனர். புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி, பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர்.