புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 100-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என 2 வெண்கலம் வென்ற மனு பாக்கர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார்.
மேலும், வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
அதன்பின், வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது ஒலிம்பிக் போட்டி அனுபவங்களை அவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.