தமிழக அமைச்சரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம்!!

சென்னை:
புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

மேலும் அமைச்சரவையில், வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இதுதவிர, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகிய அமைச்சர்களின் துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை, சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை, கோவி.செழியனுக்கு உயர்கல்வித் துறை, ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டன.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடனடியாக தலைமைச்செயலகம் வந்து அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் முன்னதாக அமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்டிருந்த அறை வேறு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்ததால், அதே அறையில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மற்ற அமைச்சர்களான சா.மு.நாசருக்கு, தலைமைச்செயலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் ஏற்கெனவே அமைச்சராக இருந்த மனோதங்கராஜின் அறையும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு, 2-வது தளத்தில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இருந்த அறையும், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு, அதே துறையை முன்பு கவனித்த ராமச்சந்திரன் இருந்த அறையும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இவர்கள் மூவரும் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றனர்.

இதற்கிடையே, முந்தைய அமைச்சர்கள் சார்ந்த பொருட்கள், துறையின் கோப்புகள் இருந்ததால், அவற்றை எடுக்கும் பணியில் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஓரிரு நாட்களில் அமைச்சர்கள் தங்களுக்கான அறையில் வந்து பணியைதொடங்குவார்கள் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர, துறை மாற்றப்பட்ட பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுக்கான அறைகளில் அப்படியே புதிய துறைக்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.

துணை முதல்வரின் செயலர்கள்: துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறையில், ‘துணை முதல்வர்’ என எழுதப்பட்ட பலகை பொருத்தப்பட்டது.

அதேபோல், அவருக்கான அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்திலும் ‘துணை முதல்வர்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. நேற்று அவர் தனது அறையில் அதிகாரப்பூர்வமாக துணை முதல்வராக வந்து அமர்ந்தார்.

இதற்கிடையே, துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் தலைமைச்செயலர் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும், இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

மூத்த அதிகாரிக்கான தேர்வில் உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எந்த வரிசையில் இடம் பெறுகிறார்களோ, அதே வரிசையில்தான் சட்டப்பேரவையிலும் அமைச்சர்கள் அமர்வார்கள்.

அந்த வகையில், தற்போது தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ள அமைச்சரவை பட்டியலில், முதல்வர் உட்பட 35 பேர் உள்ளனர்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்ததாக 2-ம் இடம் துரைமுருகனுக்கும், 3-ம் இடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் 19-வது இடத்திலும், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முந்தைய இடத்திலேயே (21) உள்ளார்.

அமைச்சர் சேகர்பாபுவுக்கு அடுத்ததாக 27-வது இடத்தில் அமைச்சர் கோவி.செழியனும், 29-வது இடத்தில் அமைச்சர் சா.மு.நாசரும் உள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *