நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ரஜினிக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுள்ளது. தொடர்ந்து ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, மருத்துவர்கள் சாய் சதீஷ், விஜய் சந்திரன், பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வந்தனர்.
இதனிடையே சிக்சை முடிந்து ஐசியுவில் இருந்த ரஜினிகாந்த் கண்விழித்து பேசியதாகவும், தனக்கு சிகிச்சியளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ரஜினிகாந்த், ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருந்தாலும், சிகிச்சை காரணமாக சில வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.