தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நவ.26, 27-ல் கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை:
நவ.26, 27-ல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (நவ.25) காலை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகள் 26, 27 தேதிகளில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். அதுவும் 26-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு 26, 27 தேதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு அலர்ட் விடுக்கப்பட வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையைப் பொருத்தவரை பொறுமையாக இருப்போம். இன்றைக்கு இரவு இப்பகுதிகளில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை.

குறிப்பு: ஐரோப்பிய வானிலை அய்வு மைய கணிப்புகளின் படி காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்றுள்ளது அதேவேளையில் இந்திய வானிலை ஆய்வு மையமானது இலங்கை, பர்மாவில் நிலவும் காற்றழுத்த நிலையானது புயலாக மாறும் எனக் கணிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.25) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிப்பு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *