நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து, ‘சூர்யா 45’ என்ற தலைப்பு கொண்ட புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்று காலை பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு வந்தார்.
பின்னர் கோவிலுக்குள் சென்ற அவர், அர்ச்சனை செய்து, பட்டீசுவரர் சுவாமியை மனம் முருக வழிபட்டார். தொடர்ந்து கோவில் வெளிப்புறத்தில் உள்ள கொடிமரம் முன்பு, சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சாமி கும்பிட்டார்.
15 நிமிடம் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட நடிகர் சூர்யா, அதன்பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது உதவியாளர் உள்பட 3 பேரும் வந்திருந்தனர்.
நடிகர் சூர்யாவுடன் கோவில் அலுவலக ஊழியர்கள் சீனிவாசன், விவேகானந்தன், ஞானவேல் மற்றும் சிவாச்சல குருக்கள், பக்தர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தரிசனத்தை முடித்து கொண்ட, நடிகர் சூர்யா கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பையொட்டி கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்பு ஏராளமானோர் குவிந்திருந்தனர்.