சென்னை:
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராக பணி வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரேமா தலைமை தாங்கினார்.
அப்போது, அரசு துணை சுகாதார நிலையத்தில் உடனடியாக பணி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பிரேமா கூறியதாவது:
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் 1,800 பேருக்கு சுகாதாரத் துறை, பணி நியமன ஆணை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றிய காலத்தில் அந்த பணியிலிருந்து வரும் ஊதியத்தை விட்டுவிட்டு கிராம சுகாதார செவிலியர் பயிற்சியை 2 ஆண்டுகள் பயின்றோம்.
ஆனால், 2021-ம் ஆண்டிலிருந்து பயிற்சி முடித்த யாருக்கும் கிராம சுகாதார செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.