எங்கள் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் திமுக-விற்கு அச்சம் வந்துவிட்டது என நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 05ம் தேதி நடைபெற்றது. அதிமுக, பாஜக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 61, 834 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 13,466 வாக்குகள் மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளார். இதன் மூலம் திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேட்டியளித்த நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, நாதக-விற்கு இது பின்னடைவே இல்லை.
ஏனெனில் போனமுறை கிடைத்த வாக்குகளைவிட பலமடங்கு அதிகமாகவே இந்த முறை கிடைக்கின்றன. மக்களிடத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது. மக்களை சிந்திக்க வைத்ததே சீமானின் வெற்றிதான்.
எங்கள் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் திமுக-விற்கு அச்சம் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த் மண்ணில் மாபெரும் மாற்றம் வரும் என கூறினார்.