தாம்பரம்:
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று காலை 5.10 மணிமுதல் மாலை 4.10 மணிவரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
பயணிகள் வசதிக்காக தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்கள் ரத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் திரண்டதால் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால் சிறப்பு ரயிலைப் பிடிப்பதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடியதால் ரயில் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 12 முதல் 2 மணி வரை முழுமையாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்தனர்.
4.10 மணிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதால், படிப்படியாக கூட்ட நெரிசல் குறையத் தொடங்கியது.