சென்னை;
ஆதாரமில்லாமல் அண்ணாமலை கருத்துகளை தெரிவிக்கிறார் என அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சியில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை; கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம்.
சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருகின்றனர்.
சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா? என கூறினார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: சிறைக்கு அஞ்சாத நெஞ்சங்கள் தான் திமுகவில் உள்ளவர்கள்.
ஆதாரமில்லாமல் அண்ணாமலை கருத்துகளை தெரிவிக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களை மனதில் வைத்து அண்ணாமலை இந்த கருத்தை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா என கூறினார்.