சென்னை:
தமிழகத்தின் அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியில், கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி விகிதத்தைவிட 2024-25ம் ஆண்டில் 9.69 சதவீதத்துடன் அதிகபட்ச வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் கூட்டுறவுத்துறையம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத்துறையின் கீழ் பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021-ன் கீழ் 11.83 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,918 கோடி அளவுக்கு தள்ளுபடி சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி 2021-ன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் ரூ.2,117 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,56,296 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.
ரூ.54,968 கோடி பயிர் கடன்: வட்டியில்லா பயிர்க் கடனாக தற்போது வரை 68,01,609 விவசாயிகளுக்கு ரூ.54,968 கோடி வழங்கப்பட்டுள்ளது. உழவர் கடன் அட்டை திட்டத்தில் 12,28,416 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,610 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 1,99.209 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11,627 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட 19,791 பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.65 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மேம்படுத்த 16,836 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.478 கோடியும், 51,795 மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.298 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளை சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும், 48,353 பயனாளிகளுக்கு ரூ.232 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் உரிமைத் தொகை பெறுவதற்காக இதுவரை 8.35 லட்சம் வங்கிக் கணக்குகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளன. ‘சிறகுகள்‘ சிறப்புக்கடன் திட்டத்தில், 105 மாற்றுப்பாலினத்தவர்களுக்கு ரூ.1.14 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
1000 முதல்வர் மருந்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட 1000 முதல்வர் மருந்தகங்கள் மூலம் 1500 தொழில்முனைவோர் மற்றம் மருந்தளுநர்கள் நேரடி வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
முதல்வர் அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கூட்டுறவுத்துறை என்றும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.