லக்னோ:
நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என நினைக்கக் கூடாது. அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார்.
நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அணியின் செயல்பாட்டை முன்னேற்ற முயற்சி செய்வோம்.
கடந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கொஞ்சம் கூட எதிரணிக்கு சவால் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து எப்படி முன்னேறலாம் என்பது குறித்து கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
எங்கள் அணி தோல்வியின் மூலம் பல காயங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காயத்தை எல்லாம் நாங்கள் உத்வேகமாக மாற்றி வெற்றியை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.
வீரர்கள் தங்களது பார்மை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
நாம் அனைவரும் சிக்சர்களைப் பற்றியே பேசிக் கொள்கிறோம். ஆனால் அதுவே அனைத்தும் கிடையாது.
சிக்சர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். இதை சில அணிகள் சிறப்பாக செய்கின்றது.
எனினும் நாம் ஒன்றும் பேஸ் பால் போட்டியில் இல்லை சிக்சர், பவுண்டரி பற்றி பேச. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகே.
லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் நிச்சயம் எங்களுக்கு அபாயத்தை கொடுப்பார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றார். அவரை விரைவில் ஆட்டம் இழக்கவைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.