பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெலகாவி, சதவத்தி தாலுகா முனவல்லி நகரத்தை சேர்ந்த பஞ்சாக் ஷரி (வயது 33) வர்ஷனி, (வயது 28) இந்த தம்பதிகளுக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். வர்ஷனி, இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஹூப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆப்பரேஷனில், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த மூன்று குழந்தைகளும், தாய் வர்ஷனியும் நலமாக உள்ளனர். ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளதால், வர்ஷனி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.