முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் பெருமளவு அதிகரிப்பு !!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் பெருமளவு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

இத்தகைய திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விளைவாக, பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு மட்டுமல்லாமல் கற்றல் திறனும் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் 88% உயர்வு. 60% மேற்பட்ட மாணவர்கள், வகுப்புகள் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே பள்ளிக்கு வந்து விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *