திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 3-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை உச்சியில் காட்சி அளிக்கும். அதன்படி நேற்று 10-வது நாளாக மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தது.
இதனை பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்தபடியும், நகரத்தின் பல்வேறு பகுதிகள், கிரிவலப்பாதையில் இருந்தபடியும் தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழா தொடங்கியது முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்றுடன் (சனிக்கிழமை) மகா தீபக் காட்சி நிறைவு பெறுகிறது.
வழக்கம் போல் இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் நாளை அதிகாலை வரையில் காட்சியளிக்கும். அதன் பின்னர் அதிகாலையில் மலை உச்சியில் இருந்து மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும்.