சென்னை:
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 342 மையங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்று விப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’, 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின்கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2025-26-ல் முதல்கட்டமாக 5 லட்சத்து 37,876 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
2-ம் கட்டமாக 9 லட்சத்து 63,169 பேருக்கு 39,250 கற்போர் எழுத்தறிவு மையங்களில் கற்பித்தல் செயல்பாடுகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கும் கடந்த டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 342 மையங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மாநில எழுத்தறிவு விருதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.