சென்னை:
சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார்.
தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருந்தன.
அதில், அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் இன்று (பிப்.3) காலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன்.
அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட் யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு உள்ளது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டுமே மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் நடந்த அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?. அண்ணாவின் குடும்பம் இன்று எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?.
அவர்கள் யாரும் அரசியல் பக்கம் வருவதே இல்லை. இப்போதைய சூழலில், அண்ணா என்ற பசு மாட்டின் மீது நிற்கும் காகம் தான் திமுக ஆட்சி. திமுக மீதான வெறுப்பு திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானதாக மாறி வருகிறது
மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி. ஸ்டாலின் என்ன சொன்னாலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ‘கெட் – இன்’ தான்.
அதுபோல், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதல்வர் வேட்பாளர்.
தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார்.
இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை.
அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்று கொண்டால் பார்க்கலாம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.