திண்டுக்கல்:
“விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் என்ன செய்யப்போகிறோம் என அவர் இதுவரை சொல்லவில்லை. சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் என்ன செய்யப்போகிறோம் என அவர் இதுவரை சொல்லவில்லை.எல்லா அரசியலையும் மக்கள் பார்த்துவிட்டனர். சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது.
எந்த இயக்கமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக திமுக விமர்சிக்கும். கரூர் நிகழ்வுக்கு வந்து பார்க்காத விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். நடித்துப் பார்க்கிறார், டான்ஸ் ஆடிப்பார்க்கிறார், அது இங்கு நடக்காது.
மக்கள் மத்தியில் நிலைத்து அரசியலில் புகழ்பெற்ற இயக்கம் திமுக. சாதனை நாயகனாக உள்ள தமிழக முதல்வருக்கு 70%-க்கு மேல் மக்கள் ஆதரவு உள்ளது.
கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை, எங்கள் தலைவர் அதுகுறித்து முடிவு செய்வார்.
எந்த ஒரு இயக்கமும் கூட்டணியாக ஒரே அணியில் இத்தனை ஆண்டுகள் இருந்ததில்லை. சட்ப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல்களிலும் திமுக கூட்டணி தான் வெல்லும்.
நான்கு ஆண்டுகளாக மக்களை சந்திக்காதவர் எடப்பாடி பழனிசாமி. அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஓபிஎஸ் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இது குறித்து எங்கள் தலைவர் முடிவு செய்வார்.
பழநியில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலைக்கும் பழநிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
இந்த சந்திப்பின்போது, திமுக எம்எல்ஏ.,க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.