சென்னை:
மக்காச்சோளம் கொள்முதலை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியதாவது: பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தருமபுரி மற்றும் கோடை சாகுபடியாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி பெரும் அளவு செய்யப்படுகிறது.
தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் இதன் விலை குவிண்டால் ரூ.1,600 அளவில் தான் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது, ஓரளவுமுறையான உற்பத்தி என்றால் ஏக்கருக்கு சராசரி 15 குவிண்டால் மகசூல் கிடைக்கும்.
ஆனால் தீவிர பருவ மழை, உரிய மழையின்மை, நோய் பாதிப்பு போன்ற காரணங்களால் அதிகபட்சம் ஏழு முதல் ஒன்பது குவிண்டால் மட்டுமே தற்போது சோளம் மகசூல் கிடைக்கிறது.
தற்போது சந்தை விலை ஒரு குவிண்டாலுக்கு சராசரி ரூ.1,600 அளவில் உள்ளது. ஆக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ரூ.3,545 என அரசு அறிவித்துள்ளது. அதில் சரிபாதி தான் தற்போது கிடைக்கிறது.
வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்து வரும் நிலையில் இந்த விலை இழப்பை விவசாயிகள் சந்திக்கின்றனர்.
மத்திய அரசு விலையை நிர்ணயித்தால் மட்டும் போதாது. இந்த நெருக்கடியான நிலையில் அரசே மாவட்டங்களில் மக்காச்சோளம் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும்.
அரசின் கொள்முதல் மேற்கொள்வதற்கான கட்டமைப்பும், வேளாண் துறையின் மார்க்கெட்டிங் கமிட்டியும் இருக்கிறது.
இதை பயன்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க அண்டை மாநிலங்களைப் போல இழப்பீட்டு மானியம் வழங்கி ஈடு செய்து விவசாயிகளை காத்திட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.