ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணி உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சர்ச்சைக்கும் வழிவகுத்துள்ளது. கொழும்பில் கடந்த 10-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் அவரது பந்துவீச்சு பாணி விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. உஸ்மான் தாரிக் ஓடிவந்து அதன் பின்னர் கிரீஸில் இடை நிறுத்தம் செய்தபடி பந்து வீசுகிறார். இது பார்ப்பதற்கு பேட்ஸ்மேனை நோக்கி பந்தை எறிவது போன்று இருக்கிறது. இதனால் இது விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அடுத்து முக்கியமாக 15 டிகிரி விதி உள்ளது. இதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது.
அதிரடி வீரர்களான ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணியில் சமீபத்தில் ஆட்டமிழந்து இருந்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சர்வதேச டி 20 போட்டியில் டெவால்ட் பிரேவிஸ், உஸ்மான் தாரிக் வீசிய 2-வது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக லாகூரில் நடைபெற்ற இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியபோது, வைடு பந்தை நேரடியாக கவர் ஃபீல்டரிடம் அடித்து கேமரூன் கிரீன் ஆட்டமிழந்தார். அப்போது கேமரூன் கிரீன் எல்லைக் கோட்டுக்கு அருகில் தாரிக்கின் பந்துவீச்சு நடவடிக்கையை கேலி செய்தார்.
இது ஒருபுறம் இருக்க டி 20 கிரிக்கெட்டில் தாரிக்கின் எழுச்சி நம்ப முடியாததாகவும் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடரின் போது ஜிம்பாப்வேக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆட்டங்களில் விளையாடி 88 பந்துகளை வீசியுள்ள அவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 5.93 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போது சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு நடவடிக்கைக்காக அவர் மீது இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சோதனைக்குப் பிறகு அவர், பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.
உஸ்மான் தாரிக் கரீபியன் பிரீமியர் லீக்கிலும் இடம்பெற்று கவனம் ஈர்த்தார். பந்து வீசுவதற்கு முன் நீண்ட நிறுத்தம் செய்யும் உஸ்மான் தாரிக், பந்தை காற்றில் மெதுவாக தூக்கி வீசுவார். இது வழக்கமான பந்துகளைவிட பேட்ஸ்மேன்களை வந்தடைய சிறிது நேரம் எடுப்பதை போன்ற தோற்றதை உருவாக்கும்.
வேகம் குறைந்த இதுபோன்ற பந்துகளை பேட்ஸ்மேன்கள் கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் கவனக்குறைவுடன் பந்துகளை விளாச முயன்றால் பந்துகள் எல்லைக் கோட்டுக்கு செல்வதை விட ஆடுகளத்துக்குள்ளேயே உயரமாக சென்று கேட்ச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சர்பராஸ் அகமது கூறும்போது, “உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சில் க்ரீஸில் காலடி எடுத்து வைக்கும் தருணத்தில் நீண்ட இடைநிறுத்தம் ஏற்படுவதால், பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்.
நீண்ட இடைநிறுத்தம் பேட்ஸ்மேன் களின் கவனத்தை சிதைக்கிறது. உஸ்மான் தாரிக் வேகமாக பந்து வீசும்போது, வேகத்தை குறைத்து வீசும் போதும் பந்து எந்த வகையில் வருகிறது என்பதில் தெளிவில்லாமல் பேட்ஸ்மேன்கள் பந்துகளை தவறவிடுகின்றனர்” என்றார்.
வழக்கத்துக்கு மாறான உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணி பாகிஸ்தானின் ரகசிய ஆயுதமாகவும், கிரிக்கெட்டின் பரபரப்பான விவாதமாகவும் உள்ளது. டி 20 உலகக் கோப்பை தொடரில் நாளை (15-ம் தேதி) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடை பெறுகிறது. இந்த ஆடுகளம் முற்றிலும் சுழலுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் உஸ்மான் தாரிக்கின் பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
‘தாரிக் நின்றால் விலகிவிடுங்கள்’
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சானலில் ‘அஸ்வின் குரல்’ நிகழ்ச்சியில் கூறும்போது, “உஸ்மான் தாரிக் பந்தை வீசுவதற்கு முன்பு நிறுத்தம் செய்து வீசினால் பேட்ஸ்மேன் ஸ்டெம்பை விட்டு விலகிச் செல்ல உரிமை உண்டு. பந்துவீச்சாளர் நின்றுவிட் டார் என நினைத்தேன்’ என்று பேட்ஸ்மேன் கூறிவிடலாம்.
அது ஒரு சுவாரஸ்யமான விஷயமாகவும், நடுவருக்கு மிகப்பெரிய தலைவலியாகவும் இருக்கும். நான் களத்தில் இருந்திருந்தால் அதைச் செய்திருப்பேன். விதிகளுக்கு உட்பட்டு ஆட்டத்தை வெல்ல எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அவர் எப்போது பந்தை விடுவிப்பார் என்று எனக்குத் தெரியாது, நான் விலகிச் செல்வேன் என்று நான் சொல்வேன். நான் விலகிச் சென்றால், அது நடுவரின் பொறுப்பு” என்றார்.
‘விளாச வேண்டிய நேரம்’
உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு தொடர்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் கூறும்போது, “நாங்கள் ஏற்கனவே பயிற்சியை முடித்துவிட்டோம். இப்போது பந்தைப் பார்த்து எங்கள் இயல்பான விளையாட்டை விளையாட வேண்டிய நேரம் இது.
பந்துவீச்சாளரின் வீடியோவை பார்த்தாலே எந்த மாதிரியான பந்துவீச்சு நடக்கப் போகிறது என்பது பற்றிய ஒரு யோசனை கிடைக்கும். எனவே இந்த விஷயத்தை நாங்கள் எளிமையாக வைத்திருக்கிறோம். நமீபியா அணியின் ஜெரார்டு எராஸ்மஸ் பந்து வீச்சில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது”என்றார்.
..