கொழும்பு:
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
கொழும்பில் உள்ள ஆர்.பிரமேதாசா கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்தார். தொடர்ந்து திலக் வர்மா களத்துக்கு வந்தார்.
மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அசத்தினார். 40 பந்துகளில் 77 ரன்களை அவர் விளாசினார். 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும்.
சில ஷாட்களை மிஸ் டைம் செய்திருந்தாலும் 192 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவரது இன்னிங்ஸ் இருந்தது. திலக் வர்மாவுடன் இணைத்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
பவர்பிளேவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. அதில் 42 ரன்களை இஷான் கிஷன் விளாசி இருந்தார்.
பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட் செய்ய வந்தார். திலக் வர்மாவுடன் 38 ரன்கள் கூட்டணி அமைத்தார் சூர்யகுமார் யாதவ். திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபேவுடன் சேர்ந்து 33 ரன்கள் சேர்த்தார்.
சூர்யகுமார் யாதவ், 32 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் தாரிக் வீசிய பந்தை பெரிய ஷாட் ஆட முயன்று விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் துபே மற்றும் அக்சர் ஆட்டமிழந்தனர்.
இதில் துபே 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அக்சர் ரன் ஏதுமின்றி ஷாஹீன் அப்ரிடி வசம் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங், 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சாயி அயூப் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உஸ்மான் தாரிக், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டுகிறது.