காவலர் குறைதீர் சிறப்பு முகாமில் ஒரே நாளில் 250 போலீஸாரின் கோரிக்கைகளை ஏற்று காவல் ஆணையர் உத்தரவு!!

சென்னை:
காவலர் குறைதீர் சிறப்பு முகாமில் ஒரே நாளில் 250 போலீஸாரின் கோரிக்கைகளை ஏற்று காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக காவல் ஆணையரிடம் முறையிடலாம்.

இப்படி அரசு விடுமுறை தினங்கள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதேபோல் போலீஸாரின் குறைகளை தீர்க்கும் வகையில், வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், சென்னையில் உள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய 4 மண்டலங்களில் பணிபுரியும் போலீஸார் தங்களது குறைகளை புகார் மனுக்களாக அளித்தனர்.

அதன்படி, 7 காவல் ஆய்வாளர்கள், 30 எஸ்ஐ-க்கள் உட்பட 250 போலீஸார் பணி மாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மனு அளித்தனர்.

அதை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அருண், இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது இணை ஆணையர் (தலைமையிடம்) மகேஸ்வரன், துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, ஹரிகிரண் பிரசாத், ஈஸ்வரன், கார்த்திக், குத்தாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *