தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்திது!!

சென்னை:
தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந்தேதி பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.


அதைத் தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளன. டோட்லா, ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பால் விலையை உயர்த்தி வருகின்றன.

கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 78 ரூபாய் ஆகவும், டீ ஸ்பெஷல் பால் 68-ல் இருந்து 70 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் 66 ரூபாயில் இருந்து 68 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் 60 ரூபாயில் இருந்து 62 ஆகவும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதே போல தயிர் ஒரு கிலோ ரூ. 74-ல் இருந்து 76 ஆகவும் 450 கிராம் தயிர் ரூ. 38-ல் இருந்து ரூ.40 ஆகவும் இரு முறை சமன்படுத்தப்பட்ட தயிர் ஒரு கிலோ ரூ. 70-ல் இருந்து 72 ஆகவும் உயர்ந்துள்ளது.


தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள்.

தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது. அரை லிட்டருக்கு 10 ரூபாய் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ஆவின் பால் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

இதனால் ஆவின் பாலுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் வந்தவுடன் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைந்தது காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன.

இதன் காரணமாக பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தனியார் பால் நிறுவனங்கள் பால் விவசாயி ளிடம் இருந்து அதிக விலை கொடுத்து பாலை வாங்குவதால் விலையை உயர்த்தி உள்ளனர் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும் போது, பால் உற்பத்தியில் ஆவின் நிறுவனம் கவனம் செலுத்தவில்லை. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பால் உற்பத்தி குறைந்துவிட்டது.

இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *