சென்னை:
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
கடந்த ஜனவரி 30 முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான “துரந்தர்: தி ரிவெஞ்ச்” (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. முதல் பாகம் 3.30 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 4 மணி நேரம் ஓடக்கூடிய படமாக உள்ளது.
சென்சாருக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தின் நீளம் 3.55 மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது உறுதி செய்யப்பட்டால் துரந்தர்: தி ரிவெஞ்ச் இதுவரை வெளியான மிக நீளமான இந்தி படங்களில் ஒன்றாக மாறும். இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் மார்ச் 19 வெளியாக உள்ள டாக்சிக் திரைப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.
கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் படம் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. துரந்தர் – டாக்சிக் ஆகிய இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.