டெஹ்ரான்:
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஈரான் கல்வி நிலையங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தங்கள் பருவ இறுதித் தேர்வுகளை பின்னர் எழுதவும், முனைவர் பட்ட ஆய்வறிக்கையை பின்னர் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள், அதற்கான தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஈரான் வான்வெளி சர்வதேச விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கேட்டுக்கொண்டது. எனினும் வான்வெளி மூடப்பட்டது உள்ளிட்ட பிற சவால்கள் வெளியேறும் முயற்சியை சிக்கலாக்கியுள்ளன.
டெஹ்ரான், உர்மியா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பெறுவதில் சிரமம் எற்பட்டுள்ளது.