இத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் சிலா ரூபத் திருமேனி மிகவும் கவினுற வடிக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும். தென்திசை நோக்கி உலகின் முதல் ஞான குருவாக அமர்ந்து “ஓம்” என்னும் பிரணவப் பொருளை சனகாதி நால்வருக்கு உபதேசம் செய்த மூர்த்தியான இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறந்த கல்வி ஞானமும் வாழ்க்கையில் உயர்வான நிலையும் கிடைக்கும் என்பது உறுதி.
மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அவற்றினின்று விடுபட்டு, பரமாத்மாவுடன் சேர வேண்டும் என்ற அற்புத விளக்கத்தை உணர்த்தவே தம் வலது திருக்கரத்தை சின்முத்திரை ‘காட்டி அருளும் இந்த தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நவக்கிரக குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்.
கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துக்கு வெளியே துவார கணபதி ஸ்ரீமுருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
விநாயகர் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் தேரடி முனீஸ்வரப் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.
சங்கராபரணி நதியில் நீராடிவிட்டு சந்நிதிக்கு வரும் பக்தர் ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வலம் வந்து தரிசனம் செய்த பிறகே கோவிலுக்கு வந்து ஈசனைத் தரிசனம் செய்யவேண்டும்.