ஈரானின் புதிய உச்ச தலைவராக முறைப்படி மோஜ்தபா காமேனி நியமனம்!

டெஹ்ரான்:
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் நிபுணர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இந்த நியமனத்தை “தேசத்தின் கண்ணியம் மற்றும் வலிமையின் புதிய சகாப்தம்” என்று வரவேற்றுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி ஆகியோரும் புதிய தலைவருக்குத் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த நியமனம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே இது குறித்து “அவர் எங்களிடம் அனுமதி பெற வேண்டும்; இல்லையெனில் அவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது” என்று ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், மோஜ்தபா தனது தந்தையின் கதியையே விரைவில் சந்திப்பார் என்று எச்சரித்துள்ளார்.

முன்னதாக இதுவரை அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் 1,255 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மறுபுறம், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *