கரூர்:
சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரூரில் ஒரு கட்சி நடத்திய நிகழ்ச்சி ஏற்பாடுகளை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது.
இதில், சிபிஐ எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். கேள்விகள், விசாரணை எப்படி இருக்கிறது என பார்ப்போம்.
எனக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறித்து சிலர் விமர்சித்துள்ளனர். எனக்கு சிபிஐ சம்மன் அனுப்பினால், அவர்களுக்கு என்ன, மருத்துவமனையில் நானும், கட்சியினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தோம்.
அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த அனைவருக்குமே சம்மன் அனுப்பி விசாரிக்கலாமே? மணல் திருட்டை தடுக்கிறேன் எனக் கூறிவிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சரே சட்டவிரோதமாக மணலை பதுக்கி வைத்திருந்தார்.
நான் 50 வயதில் 20 ஆண்டுகள் எம்எல்ஏ, 10 ஆண்டுகள் கவுன்சிலர் என 30 ஆண்டுகள் மக்கள் பணியாற்றி வருகிறேன். ஒருவர் 5 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என அவரை எதிர்த்து போட்டியிட்டவரைத்தான் கேட்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து அவர் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 2-வது முறையாக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றிபெற்று சாதனை படைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.