புதுச்சேரி:
இன்றுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடையும் நிலையில், இண்டியா கூட்டணியில் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் சில தொகுதிகளில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது.
தேர்தல் இவ்வளவு சீக்கிரமாக அறிவிக்கப்படும் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்க்கவில்லை.
முதல் இரு நாட்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 18 ஆம் தேதி அமாவாசை என்பதால் அன்றைய தினத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாமலேயே காங்கிரஸ், திமுக, லஜக உள்ளிட்ட கட்சியினர், சுயேட்சைகள் மனுதாக்கல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மறுநாள் வியாழக்கிழமை அமாவாசைக்கு மறுநாள் என்பதால் அதிகளவில் மனுதாக்கல் செய்யவில்லை.
ஆனால், வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நான்காவது நாளான வெள்ளிக்கிழமையன்று கூட்டணி முடிவு ஏற்படாமலேயே இழுபறி இருந்த நிலையிலும் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், சபாநாயகர் செல்வம், துணைசபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், சந்திர பிரியங்கா உட்பட மாநிலம் முழுவதும் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 10, அதிமுகவுக்கு 2, லஜகவுக்கு 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. வேட்பாளர்களும் அறிவித்து கூட்டணி தெளிவாகி விட்டது.
ஆனால் எதிரணியான இண்டியா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. தொகுதிப் பங்கீடு நேற்று வரை முடிவாகாத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டார்.
பின்னர், விசிக தரப்பில் ரவிக்குமார் எம்பி, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் தொடங்கி காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வரை பலரும் பேசியும் குழப்பமே நீடிக்கிறது.
காங்கிரஸார் மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கம் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்தன. ஓட்டலுக்கும் கட்சி அலுவலகத்துக்குமாக காங்கிரஸ் தலைவர்கள் சென்று வந்து பேசிகொண்டே இருந்தனர்.
நேற்று இரவு 12. 30 தொடங்கி இன்று அதிகாலை 3 வரை நடந்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுபற்றி இண்டியா கூட்டணி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘புதுச்சேரியில் காங்கிரஸ் 16, திமுக 14, சிபிஐ 1, விசிக 1 என பேசினோம்.
ஆனால் திமுக எதிர்பார்க்கும் தொகுதிகளை காங்கிரஸும், காங்கிரஸ் பணி செய்து வரும் தொகுதிகளை திமுகவும் குறிவைக்கின்றன.
நெல்லித்தோப்பை காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு கேட்கிறார்கள். திமுகவோ ஓபிஎஸ் அணியிலிருந்து வந்த ஓம்சக்திசேகருக்கு கேட்கிறார்கள்.
காலாப்பட்டு தொகுதியை திமுக வேட்பாளர் செந்திலுக்கு கேட்க, முன்னாள் அமைச்சர் ஷாஜகானுக்காக காங்கிரஸ் கேட்கிறது. முத்தியால்பேட் தொகுதியை முன்னாள் எம்எல்ஏ நந்தா சரவணுக்காக திமுக கேட்க, காங்கிரஸ் ராஜேந்திரனுக்காக கோருகிறது.
இதனால் இரு கட்சிகளும் முடிவாகாத தொகுதிகளைத் தவிர்த்து மற்றவற்றில் மனுதாக்கல் செய்கின்றனர்.
குழப்பான சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம் தட்டாஞ்சாவடியிலும், உழவர்கரையில் முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதனும் மனுதாக்கல் செய்கின்றனர்.
அதேபோல் சிபிஎம், விசிக கட்சிகள் தலா 5 தொகுதிகளில் போட்டியிட தயாராகிவிட்டன’’ என்கின்றனர். இதனால் இண்டியா கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
இதனால் மீண்டும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை திமுக- காங்கிரஸ் இன்று காலை நடத்துகின்றன.