சென்னை/விழுப்புரம்:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதிகள் உள்ள அந்தந்த மாவட்டங்களில் மாவட்டக் குழு கூட்டத்தை கூட்டி வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.
இறுதியாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ச்சுணன் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்முடிவில் என்.பாண்டி பழநி தொகுதியிலும், எம்.சின்னதுரை கந்தர்வக்கோட்டையிலும் (தனி), ஆர்.செல்லசாமி பத்மநாபபுரத்திலும், எல்.சுந்தரராஜன் திருவொற்றி யூரிலும், டி.லதா கீழ்வேளூர் (தனி) தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதில் எம்.சின்னதுரை, கந்தர்வக்கோட்டையில் ஏற்கெனவே எம்எல்ஏவாக உள்ளார். என்.பாண்டி கடந்த முறை திண்டுக்கல்லில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் கடந்த தேர்தலில் கீழ்வேளூரில் வெற்றிபெற்ற நாகை மாலிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.லதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலையில் அவரது அணி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அதன் விவரம்: சேலம் மேற்கு தொகுதியில் மாநில இணைபொது செயலாளர் அருள் எம்எல்ஏ, வந்தவாசி (தனி) தொகுதியில் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், கும்பகோணம் தொகுதியில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ம. க.ஸ்டாலின், விருத்தாசலம் தொகுதியில் மாவட்ட செயலாளர் சுரேஷ், மயிலாடுதுறை தொகுதியில் மாவட்ட செயலாளர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.