திருச்சி மாவட்டம், துடையூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, விஷமங்களேஸ்வரர் திருக்கோவில். தேவார வைப்பு தலங்களில் ஒன்றாக இக்கோவில் போற்றப்படுகிறது.
இத்தல இறைவன் விஷமங்களேஸ்வரர், கடம்பவனேஸ்வரர் என்றும், இறைவி வீரமங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இக்கோவில் கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் வீணை ஏந்தியபடி தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். பொதுவாக பெரும்பாலான கோவில்களில் தட்சிணா மூர்த்தி அமர்ந்த கோலத்திலேயே காட்சி தருவார்.
ஆனால் இக்கோவிலில் ‘திகி சண்டளா வீணை’ எனப்படும் வீணையை ஏந்தியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே இவர், ‘திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இவரின் வீணை இசைக்கேற்ப, அருகில் ஒரு பூதக்கணம் உடுக்கை அடித்துக் கொண்டும், ஒரு பெண்மணி தாளம் போட்டுக் கொண்டும் காட்சி தருகிறார்கள்.
நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தட்சிணாமூர்த்தியை மனதார வழிபட்டால் நோய்கள் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும், கல்வி, ஞானம்,இசையில் சிறந்து விளங்க நினைப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
செவ்வாய், வியாழன், ஞாயிறு, பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் இவரை வழிபடுவது விசேஷம்.
திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.