திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே கல்லம்பேடு, பூவனூர் கிராமங்களில் தெரு நாய்கள் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் அடுத்துள்ள கல்லம்பேடு, பூவனூர் கிராமங்களில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இதுகுறித்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்லம்பேடு, பூவனூர் கிராமங்களில் நேற்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்கள் உள்ளிட்டவர்கள், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் என, 9 பேரை தெரு நாய்கள் கடித்து காயப்படுத்தியுள்ளன.
இதில், காயமடைந்த 9 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இச்சம்பவம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்லம்பேடு, பூவனூர் கிராமங்களில் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.