திருமலை:
கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது.
அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
கோடை காலத்தில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கடந்த மே 1-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசன முறையை தேவஸ்தான நிர்வாகத்தினர் முற்றிலுமாக ரத்து செய்தனர்.
எஸ்எஸ்டி (டோக்கன் உள்ள சர்வ தரிசனம்) 3 மணி நேரத்துக்குள்ளும், ரூ.300 சிறப்பு தரிசனம் இரண்டரை மணி நேரத்துக்குள்ளும் சுவாமியை தரிசித்து விடுகின்றனர்.
சாதாரண நாட்களில் தினமும் 65 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர்.
ஆனால், தற்போது கடந்த 3 நாட்களில் மட்டுமே 2.45 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து உள்ளனர்.
இதனால் கடந்த 3 நாட்களில் மட்டுமே உண்டியல் மூலம் ரூ.11.95 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 2ம் தேதி அதிகபட்சமாக 91,005 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். மே 3ம் தேதி மட்டுமே உண்டியலில் ரூ.5.06 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.