அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு – மார்க்சிஸ்ட் கம்யூ!!

சென்னை:
‘திமுக – அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்தப் பின்னணியில் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி உள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்குமாறும், சட்டமன்ற அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் முடிவெடுக்க வேண்டிய ஆளுநர், அவரை அழைக்க மறுத்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

ஆளுநர், அரசியல் பாரபட்சத்தோடு செயல்பட்டு வருவதும், ஏற்கெனவே உள்ள மரபுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அரசியல் சாசன கோட்பாடுகளை மீறி இருப்பதும் முற்றிலும் ஏற்க இயலாத நடவடிக்கை ஆகும்.

தமிழக வெற்றிக் கழகம், ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை வெளிப்படையாக கண்டிப்பதே மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு ஆகியவற்றில் அக்கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பது ஜனநாயக எண்ணம் கொண்டோரின் அழுத்தமான கருத்தும், எதிர்பார்ப்பும் ஆகும் என சிபிஐ(எம்) மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது.

இதற்கிடையில் திமுக – அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது.

ஆளுநரின் நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை புகுத்துவதற்கும், மக்களின் தீர்ப்புக்கு மாறாக குதிரை பேரம் நடந்தேறுவதற்கும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் வழிவகுத்து விடக் கூடாது.

இது குறித்து விவாதித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படுவதையும், கொல்லைப் புற வழியாக பாஜக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதையும் அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தது.

இத்தகைய பின்புலத்தில் ஜோசப் விஜய் கடிதம் மூலம் கேட்டுக்கொண்ட அடிப்படையில் அரசு அமைக்க ஆதரவை வழங்குவது என்றும், அதன் மூலம் ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை முறியடித்து மக்கள் தீர்ப்பிற்கான மரியாதையை உறுதி செய்வது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதேநேரத்தில் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்றும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

புதிய அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, சமூக நீதி கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *