உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்!! திருமாவளவன் வலியுறுத்தல்….

சென்னை:
“உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

விசாரணை முடியும் வரை பணி நியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், “அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘ஆசிரியர் தேர்வு வாரியம்’ கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது.

அந்தத் தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25-ம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.

இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, இந்தத் தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, தமிழ் – முதல் தாளில் ஒருவர் 150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் – இரண்டாம் தாளில் 50-க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொருவர் தமிழ் – முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுபோல பலருக்கு நடந்துள்ளது.

பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக் கூடிய ஒன்றாக இல்லை.

எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான ஐயத்தை உருவாக்கியுள்ளது.

இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.

இந்தத் தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக் கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கை கள் சிதைக்கப்பட்டுள்ளன.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணி நியமன நடைமுறைக ளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *