தமிழக பள்ளிக்கல்வி பாடத்தைத் திட்டத்தின் படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள் கடந்த 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. 4 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடக்க இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22, 23ஆம் தேதி களுக்கு தள்ளி வைக்கப்பட்டன. எனினும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைவிலான மாணவர்கள் ஏப்ரல் 12ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
தேர்தல் பணி காரணமாக ஏப்ரல் 15 முதல் 21ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்தல் முடிந்ததும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி கடந்த 22, 23ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த சூழலில் இன்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.
இருப்பினும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு வருகிற ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது . வெயிலின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை பார்த்தப் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.