சென்னை:
“உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மேகேதாட்டு அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடை பெற்ற போராட்டத்தின் போது முதல்வர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும்.
இது கண்டிக்கத்தக்கது. துணை முதல்வர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை.
நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை.
தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
அவற்றை தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியா வது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிரு ப்பதால் சட்டம் – ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.