வரலட்சுமி விரதமும் பூஜை முறையும்…!!

ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இந்நாளில்  வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

பராபவ வருடம், ஆவணி மாதம் 5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை), வளர்பிறை நவமி திதி மற்றும் அனுஷம்/கேட்டை நட்சத்திரம்.

வரலட்சுமி விரதம் என்பது அன்னை மகாலட்சுமியின் அருள் வேண்டி, குடும்பத்தின் நலம், செல்வம் மற்றும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற் காகப் பெண்களால் பக்தியுடன் அனுசரிக்கப்படும் ஒரு புனிதமான விரதமாகும்.

செல்வத்தின் அதிபதியான வரலட்சுமியை (வரங்களை அள்ளித் தரும் லட்சுமி) இல்லத்திற்கு முறைப்படி வரவேற்று பூஜிப்பது இதன் சிறப்பாகும்.

பூஜையறையில் கலசத்தில் அரிசி அல்லது நீர், நவதானியங்கள், நாணயம் நிரப்பி, மாவிலை மற்றும் மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அம்மன் முகத்தை அலங்கரித்து லட்சுமியாக பாவித்து எழுந்தருளச் செய்வர்.

ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடை (நோன்புச் சரடு) அம்மனுக்கு சாத்தி, அர்ச்சனை செய்து பூஜைக்குப் பின் பெண்கள் தங்கள் வலது கையில் கட்டிக் கொள்வர்.

கொழுக்கட்டை, பாயாசம், வடை மற்றும் சுண்டல் போன்ற பிரசாதங்களைப் படைத்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வழிபடுவர்.

அக்கம் பக்கத்து சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கி வாழ்த்தும் பெறுவர்.

விரத பலன்களாக குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும், வறுமை நீங்கி அமைதியும் நிலவும்.

தாலி பாக்கியம் நிலைத்து, கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும். இல்லத்தில் மங்கள காரியங்கள் தடையின்றி இனிதே நிறைவேறும் என்பதும் ஐதீகம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *