குன்னூர்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள பந்துமை கிராமத்தில் மைதானத்தை விரிவாக்கம் செய்வதற்கும், தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பணியின் போது, எதிர்பாராத விதமாக ஒரு ஜெலட்டின் குச்சி மட்டும் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
மேலும், பாறைகளில் பொருத்தப்பட்டிருந்த மற்ற மூன்று ஜெலட்டின் குச்சிகள் (வெடிகுண்டு) வெடிக்காமல் இருந்ததால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற 4 நாட்களுக்கு பிறகு சென்னையை சேர்ந்த ஆறு பேர் கொண்ட வெடி குண்டு நிபுணர்கள் நேற்று வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, வெடிக்காமல் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து அகற்றினர்.
வெடிகளை அகற்றும் பணிகளையொட்டி, அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தேயிலைத் தோட்டங்களுக்கு பணிக்குச் செல்ல வேண்டாம் என்றும் முழு தடைவிதிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.