கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த தீவிபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார்.
அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தமாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.
குவைத்தில் இருந்து கேளரா கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாரியப் பனின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.