கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் விஷச் சாராயம் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் மற்றும் விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.