நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழாவில் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கோலிவுட்டின் கதாநாயகனாக மாறி ரசிகர்களின் மத்தியில் தளபதியாக தடம் பதித்துள்ளார்.
தற்போது இவர் அடுத்தக்கட்டமாக அரசியலில் காலெடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்த சூழலில் விஜய் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டுவருகிறார்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் சிறுவனின் கையில் தீ பற்ற வைத்து ஓடுகளை உடைக்க முற்பட்டபோது, அவர் கை முழுவதும் தீ பரவியது. அதனை அணைக்க முற்பட்டவரின் கையில் இருந்த பாட்டிலில் இருந்து சிந்திய பெட்ரோலால், மேலும் தீ பரவியது.
இதையடுத்து சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. தவெக சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ECR சரவணன் தலைமையில் ஏற்பாடு செய்த நிகழ்வில் இச்சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.