நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக கவுன்சிலர்களே இருந்து வரும் நிலையில், மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடித்து கடந்த ஜூலை 8ம் தேதி சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். பின்னர் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் மேயர் பதவி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, நெல்லை மாநகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பினார்.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று ( ஆகஸ்ட் 5) நடைபெறுமென மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அவர் நெல்லை மாநகராட்சியின் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.