என் புகைப்படத்தை காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும் – அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது; கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம் !! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ……..

தனது புகைப்படத்தை காலால் இன்னும் நன்றாக மிதிக்கட்டும், இதனைப்பார்த்து கட்சியினர் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் இருந்தே அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதனம் குறித்து உணர்ச்சி பொங்க பேசி வருகிறார். அந்தவகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “சனாதன தர்மத்தை அழிக்க போவதாக சிலர் சொல்கிறார்கள்.

உண்மையில், சனாதனத்தை யார் அழிக்க நினைக்கிறார்களோ, அவர்கள்தான் அழிந்து போவார்கள்” என்று உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு துணை முதல்வர் VS ஆந்திரா துணை முதல்வர் என்று சமூகவலைதளங்களில் விவாதப்போர் தொடங்கியது.

பவன் கல்யாண் மீது திமுகவினரும், திமுக மற்றும் உதயநிதி மீது பவன் கல்யாண் ஆதரவாளர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு படி மேலாக உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பவன் கல்யாணின் ஆதரவாளர்கள் காலால் மிதிப்பது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் உதயநிதி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம்.

இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்..

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *