மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியை எட்டியது!!

சேலம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இந்த அணைகளில் இருந்து தமிழக காவிரியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மழையின் தீவிரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியை எட்டியது. வழக்கமாக ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தான் அணையில் இந்த அளவுக்கு தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத தொடக்கத்திலேயே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரத்து 980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *