சிவகாசி;
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல பலரும் வேலை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேபோல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.