கரூர்:
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது, அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வந்தன.
சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் ஒரு ஆம்புலன்ஸை வழிமறித்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
இது தொடர்பான மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் நிபந்தனை ஜாமீன் பெற்றனர்.
இந்நிலையில், இந்த 7 பேரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட் பரத்குமார் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் சேலம் திரும்பினர்.
அவர்கள் இன்று (நவ.20) முதல் சேலம் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவர்.
2-வது முறையாக விசாரணை: கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 13-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும் 2-வது முறையாக நேற்று மின் வாரிய செயற் பொறியாளர் கணிகைமார்த்தாள் உள்ளிட்ட 10 அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர்.
அவர்களிடம், தவெக பிரச்சாரக் கூட்டத்தின்போது மின் தடை ஏற்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.