அயோத்தி:
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் வழிபாடு மேற்கொண்டனர்.
அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றும் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அயோத்தி சென்றார். அவரை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அயோத்தி ராமர் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோரின் ஏழு கோயில்களுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோயிலுக்குச் சென்றார்.
அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் சென்ற பிரதமர் அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கோயிலுக்குச் சென்று ராமரை தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபட்டார். அவருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் பூஜையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் கோயில் கொடியை ஏற்ற இருக்கிறார். பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட இந்த செங்கோண அமைப்பிலான முக்கோணக் கொடி, ஒளிரும் சூரியனின் உருவத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.