சென்னை:
கனமழையால் தமிழகத்தில் 20 ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. வெள்ளம் வடிந்ததும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம், மாநகராட்சியில் இயங்கி வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் வழியாக நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 30 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் நீர்த்தேக்கங்களில் தற்போது 85 சதவீதம் நீர்இருப்பு உள்ளது.
இதனால் பயப்படும்படியான சூழல் ஏதுவுமில்லை. கனமழை காரணமாக நிவாரண பணி நடவடிக்கைகளை மேற்கொள்ள 16 மாநில பேரிடர் மீட்பு படை, 12 தேசிய பேரிடர் மீட்பு படை கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு கூடுதலாக 10 தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்காக 1,185 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிக மழை எதிர் கொண்ட மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் மொத்தம் 1,836 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக 5 லட்சம் 5 கிலோ அரிசி பாக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழப்புகளை தவிர்க்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது வரை பெய்த கனமழையால் 20 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. வெள்ளம் வடிந்ததும் இதுதொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், துறை செயலர் எம்.சாய்குமார், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், மேலாண்மை துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.